Saturday, April 27, 2013

அமெரிக்காவில் பொன்னியின் செல்வன் நாடகம்


இந்த செய்தியை பத்திரிக்கையில் படிச்சவுடனே, முதலில் என் நினைவுக்கு வந்தது, பொன்னியின் செல்வன் கதையை திரைப்படமாக எடுக்க எம்.ஜி‌.ஆர் காலம் முதற்கொண்டு முயற்சி செய்து தோல்வி அடைந்ததும், அதிலும் ஓரிரு வருடங்கள் முன்பு, இயக்குனர் மணிரத்னம் அந்த கதையில் வரும் கதா பாத்திரங்களுக்கு நடிகர்களையெல்லாம் தேர்வு செய்துவிட்டார், விரைவில் படப்பிடிப்பை தொடங்க போகிறார் என்று வந்த செய்தியும். கடைசியில் அந்த முயற்சியும் வெற்றி அடையாமல் போனதும் தான்.  எத்தனையோ முறை, அந்த கதையை படிச்சிருந்தாலும், அதை ஒரு திரைப்படமாக பார்க்க முடியவில்லையே என்று ஒரு ஏக்கம் எல்லோருக்கும் இருக்கும். ஆனால் அமெரிக்க வாழ் மக்களுக்கு, அந்த ஏக்கத்தை ஓரளவுக்காவது பூர்த்தி செய்கின்ற வகையில்,   சிகாகோவில் மே மாதம் 4ஆம் தேதி பொன்னியின் செல்வன் நாடகம், சிகாகோ தமிழ் சங்கத்தின் சார்பில் அரங்கேற உள்ளது.


முதலில் சிகாகோ தமிழ் சங்கத்துக்கு என்னுடைய பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். காலத்தால் அழியாத ஒரு மாபெரும் படைப்பை உள்ளூர் கலைஞர்களை வைத்து நாடகமாக்குவதென்பது சாதாரண விஷயமில்லை. எட்டு பேர், பத்து பேரை வைத்து இங்கு நான் இயக்கிய சில குருநாடகங்களுக்கு, ஒவ்வொரு முறையும் ஒத்திகை பார்ப்பதே எனக்கு மிக பெரிய சவாலாக இருக்கும். அப்படியிருக்கும்போது, கிட்டதட்ட நாற்பது கலைஞர்களை ஒன்று திரட்டி, ஒவ்வொரு வாரமும் ஒத்திகை பார்பதென்பது மிக மிக பெரிய செயலாகும். கதையில் வரும் கதாபாத்திரங்களுக்கு நடிக நடிகையரை தேர்வு செய்து,  உடை அலங்காரத்தோடு, அந்த கலைஞர்களை படமெடுத்து யு ட்யூபில் வெளியிட்டிருக்கிறார்கள். அதனை பார்தபோது, ஓவியர் மணியம் அவர்கள் வரைந்த பல சித்திரங்கள் அப்படியே உயிர் பெற்று எழுந்து நம் கண்முன்னே நிற்கின்ற மாதிரியான ஒரு உணர்வை ஏற்படுத்தி விட்டது. “ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்” என்பது போல, அந்த கலைஞர்களை பார்த்த போதே தெரிந்து விட்டது, கண்டிப்பாக இந்த நாடகம் மிகவும் பெரியதோர் வெற்றி பெற போகிறதென்று.

சிகாகோ தமிழ் சங்கத்தின் இணையதளத்தை - 

http://www.chicagotamilsangam.org/psdocuments/ 


பார்த்தபோது, நாடகப்பிரியனான நான், இந்த நேரத்தில் சிகாகோ நகரத்தில் 

இல்லையே என்ற உணர்வு ஏற்பட்டது. 

Wednesday, April 17, 2013

தனிக்குடித்தனம் - சிறுகதை


சிகப்பி ஆச்சி இரவு உணவை முடித்துவிட்டு மெத்தையை விரித்து, அதில் உட்கார்ந்துக்கொண்டு, சிவநாமத்தை சொல்ல ஆரம்பித்தபோது தான், முன் அறையில் இருந்த தொலைபேசி அழைத்தது. ஆச்சியோ, அதை காதில் வாங்காமல், சிவநாமத்தை சொல்லிக்கொண்டிருந்தார்கள். தொலைபேசியும்  விடாமல் அடிக்கவும், சிகப்பி ஆச்சியால், சிவநாமத்தில் கவனம் செலுத்த முடியவில்லை.

இது தொலைபேசி இல்லை, தொல்லைபேசி, ச்சை, நிம்மதியா படுக்க போறதுக்கு முன்னாடி சாமி கும்பிட முடியிதான்னு சலிச்சுக்கிட்டு, எழுந்து போயி அந்த தொலைபேசியை எடுத்து,

“ஹல்லோ, ஆரு பேசுறது”?

ஆத்தா, நான் ராமு பேசுறேன். நல்லா இருக்கீங்க தானே, உடம்புக்கு ஒண்ணும் இல்லையே?”

நான் நல்லா இருக்கேன் தம்பி.  அங்க நீ,உண்ணா அப்புறம் என் செல்லப்பேராண்டி அருண் எல்லோரும் நல்லா இருக்கீங்களா?. ஏம்பா ரொம்ப நாளா போன் பண்ணலை?. சரி, எப்ப இந்தியாவுக்கு வர போறீங்க? எனக்கு உங்களை எல்லாம் பார்க்கணும் போல இருக்குப்பா”

ஆத்தா, இங்க எனக்கு வேலை ஜாஸ்தி, அதான் முன்ன மாதிரி அடிக்கடி போன் பண்ண முடியலை. அப்புறம், நம்ம அருண் ஒரு பெரிய கம்பெனில வேலைக்கு சேர்ந்துட்டான். இப்ப அவனுக்கு கலியாணம் பேசலாம்னு முடிவு பண்ணியிருக்கோம். ஆத்தா, நீங்க நம்ம பங்காளிங்க, சொந்தக்காரங்க, தெரிஞ்சவுங்க கிட்ட நல்ல பொண்ணா இருந்தா, சொல்லுங்கன்னு சொல்லிவைங்க. அடுத்த தைக்குள்ள அவனுக்கு கலியானத்தை முடிச்சுட்டா நல்லதுன்னு இங்க இருக்கிற கோவில் குருக்கள், இவனோட ஜாதகத்தை பார்த்து சொல்லியிருக்காரு”

“நான் நாளைக்கே எல்லார்கிட்டேயும் சொல்லிவைக்கிறேன். என் பேரனுக்கு என்ன குறைச்சல், அமெரிக்காவிலேயே பொறந்து, நல்லா படிச்சு, கை நிறைய சம்பாதிக்கிறான். நான்,நீன்னு பொண்ணுங்க வரிசைல நிக்க மாட்டாளுங்க?. நீ கவலையே படாதேப்பா, நான் அவனுக்கு ஒரு நல்ல பொண்ணா பார்த்து வைக்கிறேன். சரிப்பா, வேற ஒண்ணும் இல்லையே, நான் போனை வைக்கிறேன்.”

ஆறு மாதங்கள் கழித்து, அமெரிக்காவில் இருக்கும் ராமு, உண்ணாமலை தம்பதியரின் ஒரே புதல்வனான அருணாசலத்துக்கும், ஆஸ்திரேலியாவில் இருக்கும் சுப்பையா மற்றும் செல்லம்மையின் ஒரே புதல்வி சீதாவுக்கும் கண்டனூரில் மிக விமர்சையாக கலியாணம் நடந்தது. புதுமன தம்பதியர்கள் மூன்று வாரம் தேனிலவை ஐரோப்பா நாடுகளில் மிகவும் சந்தோஷமாக கழித்து விட்டு அமெரிக்காவிற்கு வந்தார்கள். சீதாவோ, தனக்கு கலியாணம் பேசி  முடித்தவுடன், தான் வேலை பார்க்கும் அலுவலகத்தின் அமெரிக்க கிளைக்கு மாற்றல் வாங்கிக்கொண்டாள். தேனிலவு முடிந்து அமெரிக்கா போன அடுத்த நாளே வேலைக்கு போக ஆரம்பித்தாள். இதனால் அங்கு எல்லா வேலையும் உண்ணாமாலையே பார்க்கும்படி ஆனது. இப்படியே மருமகள் வேலைக்கு போவதும், மாமியார் எல்லா வேலையும் பார்ப்பதுமாக ஐந்து மாதங்கள் சென்றது. ஒரு நாள், உண்ணாமலை தன் கணவனிடம்,

“ஏங்க, இங்க என்னங்க நடக்குது” என்று கேட்டாள் உண்ணாமலை

“எல்லாமே நல்லா தானே போயிக்கிட்டு இருக்கு, ஏன் உனக்கு என்ன பிரச்சனை” என்று திருப்பி கேட்டார் ராமு.

“நான் வீட்டு வேலையெல்லாம் செய்யுறதுக்கா, அருணுக்கு கலியாணம் பண்ணி வச்சோம்? ஒரு நாளாவது அவள் என்கூடமாட வேலை செஞ்சிருக்காளா? என்று உண்ணாமலை கோபப்பட்டாள் .

“ஓ! இதான் பிரச்சனையா உனக்கு, அவ தான் வீக்எண்ட்ல சமையல் எல்லாம் செய்யுறாளே” என்று மருமகளுக்காக வக்காலத்து வாங்கினார் ராமு.

“எண்ணத்தை செய்யுறா, நான் கல்யாணம் ஆன புதுசுல, வேலைக்கும் போயிக்கிட்டு, உங்கம்மாவை ஒரு வேலையும் செய்ய விடாம நானே, அம்புட்டு வேலையும் இழுத்துப்போட்டுக்கிட்டு செஞ்சேன். இந்த காலத்து பொண்ணுங்க எல்லாம், அந்த மாதிரியா இருக்காளுங்க” என்று பொரிந்து தள்ளினாள்.

“நீ எங்க ஆத்தாவுக்கு ஒத்தாசையா இருக்கேன்னு, அவுங்களை என்ன பாடு படுத்தின. சரி, இப்ப என்ன செய்யணும்னு நினைக்கிற, பேசாம மகனையும்,மருமகளையும் தனியா வச்சிடலாமா” என்று கேட்டார் ராமு.

“ஆமாங்க, அது தாங்க எல்லாருக்கும் நல்லது, தனியா வச்சாதான் அப்பப்ப போய் பார்த்துக்கிறதுக்கும் நல்லா இருக்கும். எங்க ரெண்டு பேருக்குள்ளேயும் சண்டையே வராது” என்றாள் உண்ணாமலை.

“ஆமா, ஆமா, உனக்கு மருமக தனியா இருந்தா தான், அவ கூட சண்டை போடுறதுக்கு வாய்ப்பு வராது. சரி, நான் இன்னைக்கே அவுங்க கிட்ட இதைப்பத்தி பேசுறேன். அவுங்களுக்கும் ரொம்ப சந்தோஷமா இருக்கும்” என்றார்.

“என்னைய குறை சொல்லலைன்னா, உங்களுக்கு தூக்கமே வராதே. முதல்ல அவுங்களை தனியா வைக்கிறதுக்கு வழியை பாருங்க” என்று கூறி, அங்கிருந்து நகர்ந்து போனாள்.
மாலை சற்று தாமதமாக அருணும், சீதாவும் ஒன்றாக வந்தார்கள்.

“வாப்பா அருண், என்ன இவ்வளவு லேட்டாயிடிச்சு, சரி நான் உங்களுக்கு ஒரு சந்தோஷமான விஷயம் சொல்லப்போறேன்” என்று பீடிகையோடு ஆரம்பித்தார் ராமு.

“அப்பா, நாங்களும் உங்களுக்கு ஒரு சந்தோஷமான விஷயம் சொல்லப்போறோம். முதல்ல, நீங்க சொல்லுங்க “ என்றான் அருண்.

“நாங்க உங்களை தனியா  வைக்கலாம்னு முடிவு பண்ணியிருக்கோம்” என்று கூறினார் ராமு.

“இது எப்படிப்பா, எங்களுக்கு சந்தோஷமான விஷயமாகும். ஆமா எங்களை ஏன் தனியா பிரிக்கிறீங்க” என்று கோபமாக கேட்டான் அருண்.

“இல்லப்பா, நம்ம சமுகத்துல இது சகஜம்பா, அதோடு, நீங்க சின்னஞ் சிறுசுங்க, வாழ்க்கையை இப்பதான் ஆரம்பிச்சிருக்கீங்க. தனியா இருந்தா தான் பொறுப்பு வரும். குடும்பத்தை எப்படி நடத்தணும்னு தெரிஞ்சுப்பீங்க. சரி, இப்ப உங்களோட சந்தோஷமான விஷயத்தை சொல்லுங்க” என்றார்.

“அப்பா, நீங்க ஐயாவாக போறீங்க. இன்னைக்கு தான் டாக்டர் கிட்ட போய் செக் பண்ணிட்டு வரோம் என்றான் அருண்.

“ரொம்ப ரொம்ப சந்தோசமானா விஷயத்தை தான் சொல்லியிருக்கீங்க” என்று சந்தோஷப்பட்டார் ராமு.

ஆமா அத்தை, நீங்க அப்பத்தாவாக போறீங்க. குழந்தை உண்டாகுற வரைக்கும் நான் வேலைக்கு போறது,அதற்கப்புறம் வேலையை விட்டுட்டு, வீட்டோடையே இருந்து எல்லா வேலையும் செஞ்சுக்கிட்டு, அத்தைக்கு ரெஸ்ட் கொடுக்கணும்னு கல்யாணத்துக்கு முன்னாடியே முடிவு பண்ணி வச்சிருந்தோம். அத்தையும் மாமாவும் கூட இருந்து குழந்தையை நல்லபடியா வளர்த்தா போதும்னு நினைச்சோம்” என்றாள் சீதா.

“ரொம்ப சந்தோஷம் ஆத்தா, நீ உண்டாயிருக்கிறது. ஆமா என்னமோ புதுசா எல்லாம்  பேசுற?” என்று மாமியாருக்கே உரிய சந்தேகத்தோடு கேட்டாள் உண்ணாமலை.

“அத்தை, நான் தான் ஆஸ்திரேலியாவில, அப்பத்தா, ஐயா, ஆயா, ஐயா, இல்லாம வளர்ந்தேன். எங்க குழந்தைக்கு நீங்க இங்கேயே இருக்கீங்க. அதனால நாலு நல்லது கெட்டது எல்லாம் சொல்லி வளர்த்துக்கொடுங்க. என்னதான் பெத்தவங்க நாங்க வளர்த்தாலும், வீட்டுல பெரியவங்க இருந்து வளர்க்கிற மாதிரி வராது. அதனால எங்களை தனியா போக சொல்லாதீங்க. எல்லோரும் கூட்டுக் குடும்பமா ஒண்ணா இருப்போம் அத்தை” என்று தன் கருத்தை சொன்னாள் சீதா.

உண்ணாமலை மனதுக்குள், நமக்கு நல்ல மருமகள் தான் கிடைத்திருக்கிறாள் என்று எண்ணி பூரித்துப் போனாள்.

ராமுவோ, உனக்கு நல்ல மருமகள் கிடைத்து விட்டாள். ஆனா பாவம் எங்க ஆத்தாதான். அவுங்களுக்கும் இந்த மாதிரி ஒரு நல்ல மருமகள் கிடைத்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று உள்ளுக்குள் எண்ணி, ஏக்கப் பெருமூச்சு விட்டார்.

Thursday, April 11, 2013

டிஸ்கோ மாலை


நான் இங்குள்ள ஏதோ ஒரு பப்க்கு போயி டிஸ்கோ ஆடியிருப்பதை பற்றி சொல்லியிருப்பேன்னு நீங்க நினைச்சீங்கன்னா, சாரி, நீங்க நினைச்சது கிடையாது. குழந்தைங்களோட டிஸ்கோ மாலை எப்படியிருந்துச்சுன்னு சொல்ற பதிவு தான் இது.
எங்க வீட்டு பெரிய மகாராணி அடுத்த வருஷம் பள்ளிக்கூடத்துக்கு போக போறாங்க. அதனால அவுங்களை ஐந்து நாளும் பக்கத்துல உள்ள ஒரு  டேகேருக்கு அனுப்புறோம். அந்த டேகேரும், புதுசு புதுசா ஏதாவது ஒண்ணு செஞ்சுக்கிட்டு இருக்காங்க. கொஞ்ச நாளைக்கு முன்னாடி, அடுத்த வருஷம் பள்ளிக்கூடத்துக்கு போக போற குழந்தைகளுக்கு கண் பார்வையை டெஸ்ட் பண்ணின்னாங்க. அதுக்கப்புறம் இந்த ஈஸ்டர் வாரத்துல ஒரு நாள் “easter hat parade” நடத்துனாங்க, அதுக்கு பெற்றோர்கள் எல்லாம் வரலாம்ன்னு சொல்லியிருந்தாங்க. எங்க மகாராணியோ, அப்பா, நீங்க வாங்க, வாங்கன்னு ஒரே புலம்பல். என்னால வர முடியாது, அம்மா வருவாங்கன்னு ஒரு வழியா சமாதானம் செஞ்சேன். போன வாரம் என்னடான்னா, டிஸ்கோ மாலை” நடத்துறோம், நீங்க உங்க குழந்தையை கூட்டிக்கிட்டு வாங்கன்னு சொன்னாங்க. எங்க மகாராணி, உடனே அப்பா, நீங்க ஆபிஸ் முடிஞ்சு வீட்டுக்கு வந்த பிறகு கண்டிப்பா நாம அங்க போகணும்னு ஒரே அடம். சரி, நம்மளும் போயி தான் பார்ப்போமேன்னு (முன்ன பின்ன, டிஸ்கோவுக்கு போன அனுபவம் இல்லையே!) போன வார வியாழக்கிழமை மாலை 7.30 மணிக்கு போனோம். அந்த ஹாலுக்கு போனா, உள்ள எல்லா விளக்கும் அணைஞ்சு, படத்துல வர மாதிரி வெறும் கலர் விளக்குகள் மட்டும் சுத்தி சுத்தி வெளிச்சத்தை பாய்ச்சுக்கிட்டு இருந்துச்சு. அதுக்கு மேல என்னடான்னா ஒரே பாட்டு சத்தம் (எல்லாம் ஆங்கில பாடல்கள், நமக்கு தான் ஒரு மண்ணும் விளங்கலை). ஒரு பத்து பதினைந்து குழந்தைகள் குதிச்சிக்கிட்டு இருந்தாங்க(நடனமாம்!) எங்க மகாராணியும் அந்த ஜோதியில போயி ஐக்கியமாயிட்டாங்க. நானும், எங்க அம்மணியும்,ரெண்டாவது மகாராணியும் பேசாம ஒரு ஓரத்துல போயி உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக்கிட்டு இருந்தோம். குழந்தைங்க சாப்பிடுறதுக்காக, சிப்ஸ்,பிஸ்கட் எல்லாம் வச்சிருந்தாங்க. பெரிய மகாரணிக்கிட்ட போயி, சிப்ஸ் எல்லாம் எடுத்துக்கோன்னு சொன்னோம், உடனே அவுங்க, டான்ஸ் ஆடும்போது சாப்பிட கூடாதுன்னு, ரூல்ஸ் எல்லாம் சொன்னாங்க. பிஸ்கட், சிப்ஸ் எல்லாம் வேஸ்டா போக கூடாதுங்கிற, நல்ல எண்ணத்துல(!), என்னால முடிஞ்ச அளவுக்கு அந்த சிப்ஸ்,பிஸ்கட் எல்லாம் காலி பண்னினேன். (வந்த வேலையை ஒழுங்கா பண்ணனும் இல்ல)
எப்படா இது முடியும்னு நினச்சுக்கிட்டு இருந்த நேரத்துல   புண்ணியவானுங்க, எட்டரை மணிக்கு, பாட்டையெல்லாம் அணைச்சு, விளக்கை போட்டு, அவ்வளவுதான்னு சொன்னாங்க. அதுக்கப்புறம் தான் எங்க மகாராணி குதிக்கிறதை விட்டுட்டு எங்க கிட்ட வந்தாங்க. ஒரு மணி நேரமா உட்காராம குதிச்சுக்கிட்டே இருந்திருக்காங்க. வீட்டுக்கு வந்து படுத்தா, அப்பா, கால் எல்லாம் வலிக்குது, அமுக்கி விடுங்கன்னு கெஞ்சல் வேற. சரி, ஒரு ஐந்து நிமிஷம் அமுக்கலாம்னு அமுக்கி, கையை எடுத்தா, இன்னும் கொஞ்ச நேரம் அமுக்குங்கன்னு சொல்லி, சொல்லியே, அரை மணி நேரம் அமுக்க வச்சுட்டாங்க.  அதுக்கப்புறம் தான் தூங்குனாங்க. இவுங்க ஒரு மணி நேரம் குதிச்சதுக்கு, நான் அரை மணி நேரம் கால் அமுக்குனது தான் மிச்சம். 

Friday, April 5, 2013

செல்போன் காதல் – சிறுகதை


இந்த கதை ஒரு உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எழுதப்பட்டது.

“ஹலோ, நான் குமார் பேசுறேன். மாலா இருக்காங்களா”?

“மாலான்னு யாரும் இல்லைங்களே, உங்களுக்கு என்ன நம்பர் வேணும்”?

“9444763801 தானே”?

“இல்லைங்க, ராங் நம்பருங்க” என்றபடியே செல்போனை கட் பண்ணினாள் கீர்த்தனா.

“யாருக்கிட்டேயிருந்து போன் என்று கேட்டபடியே அவளிடம் டிபன் பாக்ஸை கொடுத்தாள் மரகதம்.

“ஏதோ ராங் நம்பரும்மா” என்று சொல்லி கல்லூரிக்கு கிளம்பினாள் கீர்த்தனா.

கல்லூரிக்குள் சென்றவுடன் மீண்டும் அவள் செல்போன் அழைத்தது. திரையில் பார்த்தால், அதே ராங் நம்பர் தான். கட் பண்ணலாமா என்று ஒரு நொடி யோசித்தவள், கட் பண்ணாமல் ஆன் செய்தாள்.

மறுமுனையில், “மாலா இருக்காங்களா”?

“ராங் நம்பருங்க” என்றாள்.

“ஐயையோ, நீங்களா, ரொம்ப சாரிங்க. நான் 9444763801 தான் போட்டேன். ஆனா உங்களுக்கு போகுது. ரொம்ப சாரிங்க” என்றது மறுமுனை.

“ஆமாம், நான் தான்னு எப்படி கண்டுபிடிச்சீங்க”? என்று ஆர்வமாக கேட்டாள் கீர்த்தனா.

“உங்க குரலை எப்படிங்க மறக்க முடியும். உங்க குரல் மாதிரி ஒரு இனிமையான குரலை நான் இதுவரைக்கும் கேட்டதில்லை. அதான், நீங்க பேச ஆரம்பிச்சவுடனே கண்டுபிடிச்சுட்டேன்” என்று வழிந்தது மறுமுனை.

“என்னைய ரொம்பவும் புகழாதீங்க” என்று கூச்சப்பட்டாள்.

“இல்லைங்க, நான் உண்மையை தான் சொல்றேன். ஏங்க நாம நண்பர்களாக இருக்கலாமா” என்று மறுமுனை கேட்டது.

“ஐயோ, என்ன ஒரு டெலிபதி. நானும் இப்ப அதை தாங்க கேக்கலாம்னு நினைச்சேன். சரிங்க, நீங்க நாளைக்கு போன் பண்ணுங்க” என்று போனை தூண்டித்தாள்.

அதற்கு பிறகு இருவரும் தினமும் போனில் மணிக்கணக்காக பேச ஆரம்பித்தார்கள். கல்லூரியில் அவள் தோழி காயத்ரி,

“தினமும் அப்படி யாருக்கிட்டடி போன்ல பேசுற” என்று கேட்டாள்.

அதற்கு கீர்த்தனாவோ, “குமார்னு ஒருத்தர் கிட்ட பேசுறேன். அவரை தான் நான் விரும்புறேன் என்றாள்.

“ஆமா அவரோட உனக்கு எப்படி பழக்கம் ஏற்பட்டுச்சு” என்று வினவினாள் காயத்ரி.

“ராங் கால்ல ஆரம்பித்து, இப்ப காதல்ல வந்து நிக்குது” என்றாள் கீர்த்தனா.

“உன் ஆளை, என்னைக்கு கண்ல காட்ட போற” என்று கேட்டாள் .

அதற்கு கீர்த்தனாவோ, “அடிபோடி, நானே இன்னமும் அவரை பார்ததில்லை” என்றாள்.

“பார்க்காமலே செல்போன்ல காதலா , நடக்கட்டும், நடக்கட்டும். ஆமா எப்ப ரெண்டு பெரும் சந்திக்கப்போறீங்க”?

“கூடிய சீக்கிரம் சந்திக்கலாம்னு தான் இருக்கோம். ஆனா, என்ன தான் சொல்லு, பார்க்காமலே காதலிக்கிறதுல இருக்கிற திரில்லே தனி தான்” என்றாள் கீர்த்தனா.

“என்ன திரில்லோ” என்று கூறிவிட்டு நகர்ந்தாள் காயத்ரி.

சில நாட்கள் கழித்து, கீர்த்தனா குமாரிடம் செல்போனில்,

“ஏங்க, நாம இன்னைக்கு ஐந்து மணிக்கு உழைப்பாளர் சிலைக்கிட்ட சந்திக்கலாமா” என்று கேட்டாள்.

“அதுக்குள்ள அவசரமா, இப்பதானே நாம காதலிக்க ஆரம்பிச்சு மூணு மாசம் ஆகுது” என்றான் குமார் மறுமுனையில்.

“எனக்கு உங்களை பார்க்கணும்போல இருக்கு. அதனலாதான்” என்றாள்.

“சரி, நான் வெள்ளை கலர் அரைக்கை சட்டையும், கருப்பு கலர் பேன்ட்டும் போட்டுக்கிட்டு வரேன், நீ என்ன டிரஸ் போட்டுக்கிட்டு வர போற” என்று கேட்டான்.

“நான் ஊதா கலர் சுடிதார் போட்டுக்கிட்டு வரேன். சரியா ஐந்து மணிக்கு, உழைப்பாளர் சிலை” என்று கூறி போனை கட் பண்ணினாள்.

குமாரை சந்திக்க போகிற சந்தோசத்தில், புதிதாக வாங்கியிருந்த ஊதா நிற சுடிதாரை அணிந்து கொண்டு, கண்ணாடி முன் நின்று, தன் அழகை தானே ரசித்து, பிறகு 4.45 மணிக்கெல்லாம் மெரினா கடற்கரையில் இருக்கும் உழைப்பாளர் சிலையின் அருகே வந்து, குமாரின் வருகைக்காக வழி மேல் விழி வைத்து காத்துக்கொண்டிருந்தாள். சரியாக ஐந்து மணிக்கு வெள்ளை சட்டை, கருப்பு பேன்டில் குமார் கீர்த்தனாவிடம் வந்து,

“நீங்க கீர்த்தனா தானே” என்றான்.

கீர்த்தனாவோ, அவனுக்கு பதில் சொல்லாமல், அப்படியே மயங்கி கீழே விழுந்தாள்.

அவள் மயங்கி கீழே விழுந்ததற்கு காரணம், அவள் 25 வயது வாலிப குமாரை எதிர்பார்த்து நின்றாள், ஆனால் வந்ததோ 65 வயது முதியவரான குமார்.

பின் குறிப்பு: சில மாதங்களுக்கு முன்பு, இந்த மாதிரி ஒரு பெண் ஏமாற்றப்பட்டாள் என்று பத்திரிக்கையில் படிக்க நேர்ந்தது. இதனையே கருவாக கொண்டு, இந்த கதையை எழுதினேன். பெண்களே! அன்னியரிடம், அனாவசியமாக உங்களின் செல்போன் நம்பரை கொடுக்காதீர்கள். அதேபோல், ராங் கால் வந்தால், பேச்சை வளர்க்காமல் உடனே கட் பண்ணி விடுங்கள்.

Tuesday, April 2, 2013

தலைவா திரைப்பட அனுபவம் – முன்னுரை


இதனால், என் வலைப்பூவை படிக்கும் சகல வாசகர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால், இதுவரை என்னை நேரில் பார்க்காதவர்கள், இன்னும் சில மாதங்கள் பொறுத்திருந்தால், வெள்ளித்திரையில் பார்க்கலாம். ஆம், என் நாற்பது வருட வாழ்கையில், முதன்முதலாக ஒரு திரைப்படத்தில் தலையை காட்டப் போகிறேன். இயக்குனர் விஜய், நடிகர் விஜய்யை வைத்து இயக்கும் “தலைவா” திரைப்படத்தில்,என்னுடன் சிட்னி வாழ் தமிழர்கள் பத்து பேர் இணைந்து, நகைச்சுவை நடிகர் சந்தானத்துடன் நான்கைந்து காட்சிகளில் தோன்ற இருக்கிறோம். இதுவரை இரண்டு காட்சிகளை படமாக்கியிருக்கிறார்கள். இன்னும் இரண்டு,மூன்று காட்சிகள் மீதமிருக்கின்றன. மொத்த படத்தில், மூன்று,நான்கு நிமிடங்களாவது நான் திரையில் தோன்றுவேன் என்று நம்புகிறேன். நான் நடித்த காட்சிகள் எல்லாம் எடிட்டிங் அறையிலிருந்தும், சென்சார் அறையிலிருந்தும் வெட்டு படாமல் தப்பி வந்தால், நீங்கள் அதிர்ஷ்டசாலிகள் தான், ஏனென்றால் என்னுடைய அழகான முகத்தையும், திறமையான நடிப்பையும்  வெள்ளித்திரையில் பார்க்க போகிறீர்களே!.

இரண்டு வாரங்களுக்கு முன், என் நண்பர் ஒருவர், தலைவா படத்தில் நடிப்பதற்கு, நடிப்பில் ஆர்வமுள்ள பத்து பேர் தேவைப்படுகிறார்கள். நீங்கள் உங்கள் நாடக கலைஞர்களிடம் சொல்லி, அவர்களின் புகைப்படத்தை அனுப்ப சொல்லுங்கள், அப்படியே, நீங்களும் உங்கள் புகைப்படத்தை அனுப்புங்கள் என்று கூறினார். நானும் என்னுடைய நாடக நண்பர்களுக்கு தகவலை சொல்லிவிட்டு, என்னுடைய புகைப்படத்தையும் அனுப்பினேன். சென்ற வாரம் எங்களை எல்லாம் சந்தித்த இயக்குனர் விஜய், நீங்கள் சந்தானத்தோடு நகைச்சுவை காட்சிகளில் வருவீர்கள் என்றும். நாலைந்து நாட்கள் படப்பிடிப்பு இருக்கும் என்றும் கூறினார். இப்படித்தான் ஆரம்பித்தது என்னுடைய முதல் திரைப்பட அனுபவம்.

இந்த படம் வெளி வந்த பிறகு, இந்த திரைப்படத்தில் எனக்கு ஏற்பட்ட மொத்த அனுபவத்தையும், ஐந்தாறு பதிவுகளில் பதிக்கிறேன். அதனால் தான் இந்த பதிவை, முன்னுரை என்று பதித்துள்ளேன்.  

          - தலைவா திரைப்பட அனுபவம் - இயக்குனரை சந்திக்க சென்றது