Friday, August 24, 2012

நான் அவளில்லை


என்னடா, இது தலைப்பே ஒரு மாதிரியாக இருக்குதுன்னு நீங்க நினைக்கலாம். "நான் அவனில்லை" திரைப்படத்திற்கு போட்டியா இந்த தலைப்பில் ஒரு திரைப்படம் வந்தாலும் வரலாம். ஏன்னா விஷயம் அந்த மாதிரி. அந்த படத்துல கதாநாயகன், பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டு, அவர்களிடமிருந்து பணத்தையும், நகையையும் கொள்ளையடித்துக்கொண்டு போய்விடுவான். இந்தப் படத்தை நியாபகப் படுத்துற மாதிரி அடிக்கடி தமிழக செய்தித் தாள்களில் செய்திகள் வந்து கொண்டிருக்கும். ஆனால் இரண்டு நாட்களுக்கு முன்னால், செய்தித் தாள்களில் இந்த விஷயத்திற்கு நேர் மாறாக ஒரு செய்தி இடம்பெற்றிருந்தது. அதாவது ஒரு பெண் 50 அப்பாவி ஆண்களை மணந்து, அவர்களிடம் இருந்து பணத்தையும் பறித்துக் கொண்டு மறைந்து விட்டாள். அந்த பெண்ணை போலீஸும் தேடிக் கொண்டிருக்கிறார்கள் என்று. ஒவ்வொருவரிடமும் நான் வக்கீலுக்கு படிக்கிறேன், ஐ. ஏ. எஸ்சுக்கு படிக்கிறேன் என்று கூறி பணத்தைப் பறித்திருக்கிறார் அந்த  பலே பெண்மணி.  இந்த அப்பாவி கணவர்களில் சிலர் கொடுத்த பேட்டியை படித்தபோது, இப்படியும் ஆண்கள் இருக்கிறார்களே என்று நினைத்து வேதனைப் பட வேண்டி இருக்கிறது. இவர்கள் வீட்டிற்கு தெரியாமல் அந்த பெண்ணை திருமணம் செய்துக்கொண்டு பின்னர், எப்படியோ பெற்றோரை சம்மதிக்க வைத்து மீண்டும் அந்தப் பெண்ணிற்கு தாலியை கட்டியுள்ளனர். இப்படி திருமணத்தை கேலிக் கூத்தாக்கியவர்களை என்னவென்று சொல்லுவது. இவர்களை உட்கார வைத்து "திருமணம் ஒரு ஆயிரங்காலத்து பயிர்" என்று பாடம் எடுத்தால் கூட இவர்கள் திருந்தவா போகிறார்கள். ஆக மொத்தத்தில் ஏமாறுகிறவர்கள் இருக்கிறவரை ஏமாற்றுபவர்கள் இருந்து கொண்டே தான் இருப்பார்கள்.

 

Monday, August 20, 2012

அமெரிக்காவில் அடியேன் – 5

 
நானும் ஒரு பெரிய ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் வரும், அது தான் கடைசி ஸ்டாப்பிங்கா இருக்கும், நாம இறங்கிக்கலாம்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன். திடீர்னு பார்த்தா மறுபடியும் மெயின் ரோட் வந்துடுச்சு.  வண்டி வந்த வழியா திரும்பி போக ஆரம்பிச்சது. முதல்ல எனக்கு ஒண்ணும் புரியலை. அப்புறம் தான் என் மரமண்டைக்கு ஒரச்சது, நாம வந்த வழியா திரும்பி போறோம்னு. “McCarthy Ranch” ஷாப்பிங் சென்டர்னு பேரு தானே ஒழியே, ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் எல்லாம் இல்லை. நல்ல காலம் “ஒரு நாள் பயணச் சீட்டு” எடுத்ததுனால டிக்கெட்டைப் பத்தி கவலைப்படலை. ஒரு பெரிய சூப்பர் மார்க்கெட் கிட்ட வந்து வண்டி நின்னுச்சு. சூப்பர் மார்கெட்டுக்குள்ள போயி பார்க்கலாம்னு நினைச்சு அங்க இறங்கி அந்த சூப்பர் மார்கெட்டுக்குள்ள போனேன். அது ஒரு சீன தேசத்து சூப்பர் மார்க்கெட். ஒண்ணும் வேலைக்கு ஆவாதுன்னு உடனே வெளிய வந்தேன். பக்கத்துலேயே டெலிஃபோன் கார்டு எல்லாம் வித்துக்கிட்டு இருந்தாங்க. அந்த கடைக்கார அம்மாக்கிட்ட, ஆஸ்திரேலியாவுக்கு பேசுறதுக்கு எந்த கார்டு நல்ல கார்டுன்னு கேட்டேன். அதுக்கு அவுங்க ஒரு கார்டை காமிச்சு ரொம்ப புகழ்ந்து பேச ஆரம்பிச்சுட்டாங்க. போதாக்குறைக்கு, ஐந்து டாலர் கார்டை நாலு டாலருக்கு தரேன்னாங்க. உடனே, எனக்குள்ள இருக்கிற முன் ஜாக்கிரதை முத்தன்னா முழிச்சுக்கிட்டான். ஆஹா, இந்த அம்மா விக்காத ஒரு கார்டை நம்ம தலைல கட்டப் பாற்குறாங்கன்னு முடிவு பண்ணிட்டேன். ஆனாலும் துணிஞ்சு வேற ஒரு கார்டை எடுக்க மனசு வரலை. ஏதாவது ஒரு கார்டை எடுத்துடலாம், அந்த கார்டு சரியா வேலை செய்யலைன்னா தான் பிரச்சனையே, நான் தங்கி இருக்கிற ஹோட்டலுக்கு பக்கத்துல ஒரு கடையும் கிடையாது. அதனால ரொம்பவும் யோசிச்சு அவுங்க காமிச்ச கார்டுலேயே இரண்டு டாலருக்கு உள்ள ஒரு கார்டை வாங்கிட்டு, அவுங்ககிட்டேயே அந்த “McCarthy Ranch”க்கு போற பஸ் எங்க நிக்கும்னு கேட்டு, அங்க போயி நின்னேன். கால் மணி நேரத்துல அந்த பஸ் வந்துச்சு. வண்டிக்குள்ள யாருமே இல்லை. வண்டியை பஞ்சாபி அண்ணாத்தை தான் ஓட்டிக்கிட்டு வந்தாரு. இந்த தடவை ஒழுங்கா இறங்கணும்னு டிரைவர் கிட்டே, கொஞ்சம் வால் மார்ட் கிட்ட இறக்கி விடுங்கன்னு சொன்னேன். அவரும் அந்த “McCarthy Ranch” வளைவுக்குள்ள போனவுடனே, ஒரு நிறுத்தத்துல இறங்கிக்குங்கன்னு சொன்னாரு. வால் மார்ட் அதுக்கு பக்கத்துலேயே தான் இருக்குது. இதை முத தடவை வரும்போது நான் கவனிக்காம விட்டுட்டேன். அந்தக் கடைக்குள்ள போனா, சிட்னில இருக்கிற K-mart, target மாதிரிதான் தான் அதுவும் இருந்துச்சு. ஆனா விலை எல்லாம் ரொம்ப கம்மியா இருந்துச்சு. நானும் முதல்ல வீட்டு மகாரணிகளுக்கு துணிமணி எடுக்கலாம்னு பார்த்தா, எதை எடுக்கிறது, எதை விடுறதுன்னு தெரியலை. அந்த அளவுக்கு அங்க எல்லாம் வெறும் நாலு டாலர், ஐந்து டாலர்னு இருந்துச்சு. மிஞ்சிப் போனா, பத்து, பதினைந்து டாலர்குள்ள தான் எல்லாம் இருக்குது. ஆனா என்ன! எல்லாமே வீட்டுக்குள்ள போட்டுக்குற மாதிரி தான் இருந்துச்சே தவிர வெளியே போறதுக்கு போட்டுக்குறது மாதிரி இல்லை (அப்புறம் கொடுக்கிற நாலு,ஐந்து டாலருக்கு partywear துனியா கிடைக்கும்). எப்படியோ  ஒரு  வழியா தெளிஞ்சு, ரெண்டுப் பேருக்கும் குத்து மதிப்பா அவுங்க அளவுக்கு நாலைந்து துணிமணிகளை வாங்கினேன். அப்புறம் எனக்கு ஏதாவது ஒரு டி-ஷர்ட் வாங்கலாம்னு பார்த்தா, எல்லா டி-ஷர்ட்டும் எனக்கு சின்னதா தான் இருக்கு(!),அப்படி சொல்லனும்னு தான் ஆசை. ஆனா அதுக்கு நேர் மாறா தான் இருந்துச்சு. அதாவது அங்க இருக்கிற ஒரு சின்ன அளவு டி-ஷர்ட் கூட எனக்கு பெருசாதான் இருந்துச்சு. அப்படியும் ஒரு டி-ஷர்ட்டை போட்டுப் பார்த்தேன். என் ரெண்டு கையும் அந்த டி-ஷர்ட்குள்ள மறைஞ்சு போச்சு.கையை ஆட்டினா, யானையோட தும்பிக்கை ஆடுற மாதிரி, கை இல்லாம வெறும் டி-ஷர்ட் மட்டும் ஆடுச்சு. சரி, இது நமக்கு ஒத்து வராதுன்னு, ஒண்ணும் வாங்கிக்கலை. வீட்டு அம்மணிக்கு ஏதாவது எடுக்கலாம்னு பார்த்தா, அவுங்க போட்டுக்க கூடிய துணிமணி எல்லாம், அண்டா அளவுக்கு பெருசா இருக்குது. சரி, நம்ம பாடு ஏதாவது வாங்கிக்கிட்டு போயி, அது அவுங்களுக்கு தொள தொள இருந்தா, உடனே கல்யாணம் ஆகி, இத்தனை வருஷம் ஆச்சு, ஒழுங்கா ஒரு துணிமணி வாங்கிக்கிட்டுவர துப்பில்லைன்னு சொல்லி, உபதேசம் பண்ண ஆரம்பிச்சுடுவாங்க, இது நமக்கு தேவையா(!), அதனால அவுங்களுக்கு அப்புறம் வேற ஏதாவது வாங்கிக்கிட்டு போலாம்னு முடிவு பண்ணி, கடையை விட்டு வெளியே வந்தேன். மணியோ 2.30 ஆச்சு. மூணு மணிக்கு மாநாடு நடத்துறவுங்க ஹோட்டல்ல ரெடியா இருங்கன்னு சொல்லி இருந்தாங்க. நானும் லேட்டாயிடுச்சேன்னு பயந்துக்கிட்டு திருப்பியும் பஸ் பிடிச்சு, ரெண்டு train மாறி, ஹோட்டலுக்கு வந்தா சரியா 4.00 மணியாச்சு. எல்லாரையும் கருத்தரங்கு நடக்கிற இடத்துக்கு கூட்டிக்கிட்டு போயிருப்பாங்க. நாம எப்படி போகப் போறோம்னு தெரியலையேன்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன். அப்புறம் நடந்ததை அடுத்த பதிவுல சொல்றேன்.
                                                                                                                                              பகுதி-6

Saturday, August 11, 2012

அமெரிக்காவில் அடியேன் – 4

 
மறு நாள் காலைல எந்திரிச்சு என்ன பண்றதுன்னு யோசிச்சேன்(இதை தான் ரூம் போட்டு யோசிக்கிறதன்னு சொல்லுவாங்க போலயிருக்கு). ஏன்னா எனக்கு எப்பவுமே தனியா போயி ஊர் சுத்திப் பார்க்க பிடிக்காது. மதியம் மூன்று மணிக்கு தான் அந்த கல்வி மாநாடு ஆரம்பமாகும். சரி    அதுவரைக்கும் ஷாப்பிங்காவது பண்ணலாம்னு முடிவு செஞ்சேன். நான் அமெரிக்கா போறதுக்கு முன்னாடி எல்லோரும் வால் மார்ட்ன்னு ஒரு கடை இருக்கும். அங்க எல்லா பொருளும் ரொம்ப மலிவா கிடைக்கும், அதனால கண்டிப்பா அங்க போயிட்டு வாங்கன்னு சொல்லி அனுப்பிச்சாங்க. இந்த தகவலை சொன்னவுங்க என்கிட்ட தனியா சொல்லியிருந்தாலும் பரவாயில்லை, வீட்டு அம்மணியை வச்சுக்கிட்டு வேற சொல்லிட்டாங்களா, அதனால வீட்டு அம்மணி, நான் அமெரிக்கா வருவதற்கு முன்னாடி மூச்சுக்கு முன்னூறு தடவை, நீங்க கண்டிப்பா வால் மார்டுக்கு போயிட்டு வாங்கன்னு என் காதுல மந்திரம் ஓதி, மனசுல பதிய வச்சுட்டாங்க. அதனால இன்னைக்கு வால் மார்ட்டுக்கு போயிடணும்னு முடிவு பண்ணி, ஹோட்டல்ல வேலை பார்க்குறவங்ககிட்ட வால் மார்ட்டுக்கு எப்படி போறதுன்னு கேட்டேன். அதுக்கு அவுங்க அந்த கடை “McCarthy Ranch” ஷாப்பிங் சென்டர்ல இருக்குது. இங்கேருந்து நீங்க போகனும்னா, இரண்டு train மாறி, ஒரு பஸ் பிடிச்சு போகனும். உங்களால போக முடியுமான்னு கேட்டாங்க. நானும் ஜப்பான்ல மொழி தெரியாத போதே, இந்த மாதிரி நிறைய இடத்துக்கு போயிருக்கோம், இது வெறும் ஜூஜிப்பின்னு நினைச்சு, போக முடியும்னு சொன்னேன். உடனே அவுங்க ஒரு மேப்பை கையில கொடுத்து, எந்த trainனை எடுக்கனும், எங்க மாறனும், அப்புறம் எந்த பஸ்ஸை எடுக்கனும்னு சொன்னாங்க. நானும் அதே மாதிரி இரண்டு train மாறி, பஸ் எடுத்தேன். நான் போக வேண்டிய இடம் தான் கடைசி நிறுத்தம். அதனால நிம்மதியா நான் பாட்டுக்கு வேடிக்கை பார்த்துக்கீட்டு போனேன். ஆனா சும்மா சொல்லக் கூடாது, இரண்டு டாலருக்கு நல்லாவே ஊரை சுத்திக் காட்டுனாரு அந்த டிரைவர் அண்ணாத்தே. ரொம்ப நேரத்துக்கு அப்புறம் “McCarthy Ranch”ன்னு ஒரு நுழைவு வாயிலுக்குள்ள பஸ் போனுச்சு. நானும் இதுக்குள்ள தான் அந்த ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் இருக்கும் போலன்னு நினைச்சு இறங்குறதுக்கு தயாரா இருந்தேன். ஆனா, நான் நினைச்சது ஒண்ணு, அங்க நடந்தது ஒண்ணு. அது என்னன்னு அடுத்த பதிவுல சொல்றேன்.
                                                                                                                           பகுதி-5