Wednesday, April 1, 2020

ஆண்கள் சமையல் - மீள் பதிவு



இந்த வார பதிவாக நான் பதிவிட நினைத்தது எங்கள் கல்லூரியின் 25ஆம் ஆண்டு நினைவுகளின் சங்கமத்தைப்பற்றி தான். ஆனால் நேற்று ஒரு டிக்டாக் காணொளியை காண நேர்ந்தது. அதில் கணவன் மணி 11 ஆகுது இன்னும் சமைக்காம என்னடி பண்ற என்று கேட்பான், அதற்கு மனைவி, இந்த பாருங்க, நான் ஒரு நாள் சமைச்சா, நீங்க ஒரு நாள் சமைக்கணும். நான் ஒரு நாள் வீடு கூட்டினா, நீங்க ஒரு நாள் வீடு கூட்டணும்னு சொல்லுவார். 

இதை பார்த்தவுடன் 2012ல் நான் பதிவிட்ட ஆண்கள் சமையல் தான் நியாபகத்துக்கு வந்தது. சரி, அந்த பதிவையே மீள் பதிவாக போடலாம்னு போட்டது தான் இந்த பதிவு. அன்றைக்கு பதிவிட்ட பதிவில் புகைப்படங்கள் கிடையாது. இதில் புகைப்படங்களை சேர்திருக்கிறேன்.



சமையல் கலைக்கு உதாரணம் சொல்பவர்கள் “நள மகராஜாவை” தான் சொல்லுவார்கள். அதற்கு ஏற்ற மாதிரி, பெரிய பெரிய நட்சத்திர உணவகங்களில் ஆண்கள் தான் முதன்மை சமையல் நிபுணர்களாக இருப்பார்கள். இன்னும் சொல்லனும்னா, இங்கு ஆஸ்திரேலியாவில் தொலைக்காட்சியில் வரும் “மாஸ்டர் செஃப்(Master Chef)” நிகழ்ச்சியில் கூட, ஆண்கள் தான் நீதிபதிகளாக இருக்கிறார்கள். சமையல்னா ஆண்கள் தான் அப்படிங்கிறது மாறிப்போய் பெண்கள், வீட்டில் சமையலை குத்தகைக்கு எடுத்துக் கொண்டார்கள் (பின்ன! பெண்கள் உள்ளே நுழையாத துறை ஏதாவது இருக்கிறதா என்ன!!!). அவர்கள் இப்படி சமையலை குத்தகை எடுத்துக்கிட்டதுனால தான், என்னை மாதிரி ஆட்கள், சமையலறை எந்தப் பக்கம் இருக்கிறது என்பது கூட தெரியாமல் வீட்டில் வலம் வந்து கொண்டிருக்கிறோம். எதுக்குடா, தெரிஞ்ச விஷயத்துக்கு போயி இவ்வளவு பில்டப் கொடுக்கிறானேன்னு பார்க்கிறீங்களா, சரி விஷயத்துக்கு வரேன்.

நான் வார இறுதியில் தமிழ் சொல்லிக் கொடுக்கும் தமிழ் பள்ளியிலிருந்து, ஒவ்வொரு வருடமும் சிட்னியில் உள்ள ஏதாவது ஒரு முகாமிற்கு போயி இரண்டு நாட்கள் தங்கி விட்டு வருவோம். இதை, எங்கள் பள்ளியின் முதல்வர் தான் ஆரம்பித்து வைத்தார். இந்த முகாமில் என்ன சிறப்பு என்றால், அந்த இரண்டு நாட்களும், அதாவது, வெள்ளிக்கிழமை இரவும், சனிக்கிழமை 3 நேரமும், ஞாயிற்றுக்கிழமை இரண்டு நேரமும், ஆக மொத்தம் 6 வேளைக்கு ஆண்கள் மட்டுமே சமைத்து, பெண்கள் சாப்பிடுவார்கள். நடு, நடுவில், இந்த காபி, டீ, பஜ்ஜி, சொஜ்ஜி போன்றவைகளும் உண்டு. பெண்கள் சமையல்கட்டுப் பக்கம் தலையை கூட காட்ட மாட்டார்கள். அவர்களுடைய ஒரே வேலை, அரட்டை அடிப்பது, ஆண்கள் சமைத்ததை சாப்பிடுவது, தூங்குவது தான். இதில், கைக்குழந்தையை வைத்திருக்கும் தாய்மார்கள் மட்டும் இன்னும் ஒரு வேலையாக அந்த குழந்தையை கவனித்துக் கொள்வார்கள்.  அந்த அளவுக்கு பெண்கள் அந்த இரண்டு நாளும் ஓய்வெடுத்துக்கொள்வார்கள். ஆனால், அப்படியும் சொல்லமுடியாது, சில பேர் ஒரேடியாக அரட்டை அடித்து சோர்வடைந்து விடுவார்கள். இந்த முகாமில் இன்னொரு விசேடம் என்னவென்றால், ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என அனைவரும் தங்களின் தனித்திறமையை வெளிப்படுத்துவது தான். ஒவ்வொருவரிடமும் இவ்வளவு திறமை இருக்கிறதா என்று அப்பொழுது தான் தெரியும்.








இந்த ஆண்டும், மூன்றாவது வருடமாக, சென்ற வெள்ளிக்கிழமை மாலை  நாங்கள் ஒரு 75 பேர் முகாமிற்கு சென்றோம். அந்த முகாம், நாங்கள் வசிக்கும் இடத்திலிருந்து கிட்டதட்ட 65கிலோமீட்டர் தூரத்தில், சரியான ஒரு காட்டுப் பகுதியில் இருந்தது. அங்கு சென்றவுடன், எங்கள் தமிழ் பள்ளியின் சமையல் கலை நிபுணர்கள் இரவுக்கு கொத்து பரோட்டா செய்தார்கள். முக்கியமாக ஒரு விஷயத்தை இந்த இடத்தில் சொல்லியாக வேண்டும், அதாவது நான் இந்த முகாம்களில் எல்லாம் சமைத்தது இல்லை. வெறும் எடுபுடி தான் (வேற என்னங்க பண்ண முடியும், வீட்டு அம்மணிக்கு எடுபுடியாவே இருந்து பழகிப்போயிடுச்சு). ஆனா, நான் மட்டும் இல்லைங்க, என்னைய மாதிரி, நிறைய எடுபுடிகள், அந்த முகாமில் இருந்தார்கள். காய்களை எல்லாம் நறுக்குவதும், பாத்திரங்களை எல்லாம் கழுவுவதுமாக எங்களுக்கு கொடுக்கப்பட்ட எடுபிடி வேலைகளை ஒழுங்காக செய்தோம். அந்த இரவில், நாங்க ஒரு நான்கு பேர் காய்களை நறுக்கிக்கொண்டிருக்கும்போது, ஒரு நண்பரின் மனைவி நாங்கள் எல்லாம் எப்படி வேலை பார்க்கிறோம் என்று பார்க்க வந்தார். வந்தவர், ஒரு நிமிடம் அப்படியே நின்று, திடீரென்று, “ஏங்க என் வீட்டுக்காருக்கு நல்லா சமைக்க தெரியும், அவரைப் போயி காய்களை நறுக்க விட்டுட்டீங்களேன்னு கேட்டாரு. உடனே, என் பக்கத்தில் இருந்த நண்பர், அம்மா தாயே, நீ கிளம்பு, நானே, ஏதோ ஒரு நாலு பேருக்கு, ஐந்து பேருக்கு  சமைச்சிருக்கேன். இங்க என்னடான்னா 75 பேருக்கு சமைக்கணும், நம்மாலாள எல்லாம் அந்த அளவுக்கு முடியாதுன்னு ஒதுங்கி எடுபிடி வேலை பார்த்துக்கிட்டு இருக்கேன். நீ வேற!, என்ன, இப்ப, நான் சமைக்கணும் அவ்வளவுதானே, வீட்டுக்கு வந்து உனக்கு ஒரு நேரம் சமைச்சு போடுறேன். இப்ப இடத்தை காலி பண்ணுன்னு அழாத குறையா கெஞ்சி, அவுங்களை கிளப்பப் பார்த்தாரு. நான் உடனே, என் பங்குக்கு, ஏங்க “கத்தி பிடிச்ச கையால, எப்படிங்க கரண்டியை பிடிக்கிறதுன்னு” ஒரு பிட்டைப் போட்டுப் பார்த்தேன். (பின்ன, இந்த மாதிரி நேரங்கள்ல, நண்பனை விட்டுக்கொடுக்க முடியுமா!!). வேற வழியில்லாம அவுங்க கிளம்பி போயிட்டாங்க. அப்புறம் தான் நம்ம நண்பருக்கு நிம்மதியே வந்துச்சு. ரொம்ப பேருக்கு, அந்த நண்பர் நல்லா சமைப்பாருன்னு தெரியாது. திருமணத்துக்கு முன்னாடி, அவர் தனிக்காட்டு ராஜாவா, இருந்தபோது, அவர் நல்லா சமையல் செஞ்சு சாப்பிட்டிருக்காரு. இதை ஒரு சிறப்பு தகுதியா வச்சு, அவருக்கு பெண் பார்த்த இடத்துல , அவருக்கு வேண்டாதவங்க பெண் வீட்டாரிடம் போட்டு கொடுத்திருக்காங்க. அந்த பெண்ணும், ஆஹா, நமக்கு வரபோற கணவருக்கு நல்லா சமைக்கத்தெரிஞ்சிருக்கு, அதனால நமக்கு பிரச்சனை இல்லைன்னு, அவருக்கு கழுத்தை நீட்டிட்டாங்க. ஆனா, நண்பர் யாரு!!, கல்யாணம் ஆகி, ஏழெட்டு வருஷமா ஒரு வேளை கூட, மனைவியை உட்காரவச்சு சமைச்சு போடலை. இங்கையாவது, நம்ம கணவர் சமைச்சதை சாப்பிட்டு பார்க்கலாங்கிற ஒரு நப்பாசைல, அவர் மனைவியும் போட்டுப் பார்த்திருக்காங்க. ஆனா ஒண்ணும் நடக்கலை. 

அப்புறம் மறு நாள் காலைல ஐந்து மணிக்கெல்லாம், டீ மாஸ்டர் (டீ, காபி எல்லாம் போடுறது  தான் அந்த நண்பரோட வேலை) டீ போட்டு, எங்களையெல்லாம் எழுப்பிவிட்டார். நானும் எழுந்து, எடுபிடி வேலைகளை செய்ய ஆரம்பிச்சுட்டேன் (வீட்டில் ஒரு நாள் கூட ஐந்து மணிக்கு எழுந்ததே இல்லை). காலைல இட்லி, பொங்கல், ஊத்தப்பம், ரெண்டு வகையான சட்னி,சாம்பார் அப்படின்னு ஒரு கல்யாண விருந்தையே செஞ்சோம். மழையும், இந்த ஆண்கள் எல்லாம் எப்படி சமைக்கிறாங்கன்னு பார்க்க வந்துடுச்சு. அதனால, குழந்தைகளுக்கு தான் கொஞ்சம் வருத்தமா போயிடுச்சு. இருந்தாலும் நம்ம குழந்தைகள் அறைலேயே இருப்பாங்களா என்ன? அடாது மழை பெய்தாலும், விடாமல் நாங்கள் வெளியே சென்று எங்களுக்கான ஆக்டிவிட்டியில் இறங்குவோம்னு, ரெயின்கோட் எல்லாம் போட்டுக்கொண்டு அவர்கள் கிளம்பி போனார்கள். மதியமும் ரசம், புளிக்கொழம்புன்னு அசத்தினோம். 


மாலை ஐந்து மணிக்கு மேல், அடியேன் எழுதின “கோவிந்தா படம் தயாரிக்கிறார்ன்னு” ஒரு நகைச்சுவை நாடகத்தை போட்டோம். அந்த நாடகத்துக்காக ஒரு மூன்று நாட்கள் பயிற்சி செய்து அன்றைக்கு அரங்கேற்றினோம். சென்ற வருடமும் ”மேலை நாட்டு மருமகள்” என்கிற நாடகத்தை அடியேன் எழுதி, அரங்கேற்றினோம். இந்த முகாம் மூலமாக, என் நாடகங்களுக்கு, அருமையான கலைஞர்கள் கிடைத்துள்ளனர். நான் எதிர்பார்த்ததை விட, பெண்கள் மிக ஆர்வமாக நாடகத்தில் நடிக்க வந்தார்கள். 

மறு நாள் ஞாயிற்றுக் கிழமை அன்றைக்கு, மதிய உணவாக மல்லி பிரியாணியை செய்தோம். அன்றைக்கு மேஜிக் செய்வதற்கு வெளியிலிருந்து ஒருவர் வந்து எங்களுக்கு மேஜிக் செய்து காட்டினார். பிறகு, எல்லா குழந்தைகளையும் அவர்களுக்கு தெரிந்த ஒரு விஷயத்தை செய்யச் சொல்லி பரிசு கொடுத்தோம். இறுதியாக, இந்த வருடம் புதிதாக முகாமுக்கு வந்தவர்களிடம், அவர்களின் அனுபவத்தை கேட்டோம். அதில் ஒரு தாய்குலம், இந்த இரண்டு நாளும் நான் எங்கள் அம்மா வீட்டில் இருந்தது போல் இருந்தேன் என்று கூறினார். (இருக்காதா பின்ன, தாய் வீட்டீல், காபியாவது போட வேண்டும்,இங்கு அதுவும் கிடையாது. அப்புறம்  ஏன் சொல்ல மாட்டீங்க!) அடுத்த வருடத்து முகாமுக்கான தேதியை முடிவு பண்ணி அறிவிச்சோம், அதாவது மூன்று நாள் விடுமுறையில் (சனி, ஞாயிறு மற்றும் திங்கள்) இந்த முகாமை நடத்துவோம் என்று கூறியவுடன், பெண்களிடமிருந்து பயங்கிற ஆரவாரம் எழுந்தது. என்னன்னு பார்த்தா, மூன்று நாளைக்கும் ஆண்கள் சமைக்க போறீங்களேன்னு சொன்னாங்க. அட! ராமா, நாங்க மூன்று நாள் விடுமுறையில் முகாமை நடத்துவோம் என்று சொன்னதற்கு காரணமே, கடைசி நாள் வீட்டில் நன்றாக ஓய்வு எடுக்க வேண்டும் என்பதற்காகத்தான்ன்னு (ரெண்டு நாள் முழுக்க வேலை பார்த்து சோர்ந்து போய் விடுகிறோம்!!!) சொன்னோம். இறுதியாக, எல்லா அறைகளையும், சமையலறை எல்லாம் சுத்தம் செஞ்சு வீட்டுக்கு திரும்பினோம். அந்த இரண்டு நாளும் ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்தது, சமையலறையில் வேலை பார்க்கும்போதும் சரி, இரவு அறையில் வந்து படுக்கும்போதும் சரி, ஒரே அரட்டைக் கச்சேரி தான், அப்படியே, மனது கல்லூரி காலத்துக்கு சென்றுவிட்டது.

வருஷம் 365 நாளும் பெண்கள் ஓய்வில்லாமல் நமக்காக சமைக்கும்போது, நாம ஒரு இரண்டு நாள் அவர்களுக்கு ஓய்வு அளித்தோம்ன்னு எண்ணும்போது மனதுக்குள் ஒரு சின்ன சந்தோஷம் தலை தூக்குகிறதை மறுக்க முடியாது.   

Thursday, March 26, 2020

ஆஸ்திரேலியாவில் கொரோனா படுத்தும் பாடு






இந்த தலைப்பை பார்த்தவுடன், ஆஸ்திரேலியாவில் கொரோனா ரொம்பவும் அதிகமாயிடுச்சோன்னு நினைக்கத் தோணும். அது ஒரு வகையில உண்மை தான். ஏனென்றால் நேற்றைய நிலவரப்படி 2423 பேருக்கு இந்த நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதிலும் எங்கள் மாநிலத்தில் (NSW) தான் அதிகபட்சமாக 1029 பேருக்கு இருக்கிறது. ஆனால் நான் சொல்ல வருவது என்னன்னா இந்த கொரோனாவைக்கண்டு மக்கள் அடிக்கும் அலப்பறைகளைப் பற்றி தான். அலப்பறைகள் என்று கூற கூடாது, அவர்கள் பயத்தினால் செய்யும் செயல்கள் என்று கூறலாம்.


3 வரங்களுக்கு முன்பு நண்பர் ஒருவர் கைப்பேசியில் அழைத்து, உதயாவிலிருந்து (இங்கு இருக்கும் ஒரு பெரிய இந்திய மளிகை சாமன் கடை) எல்லோரும் சாப்பாட்டு அரிசி, இட்லி அரிசி எல்லாம் நாலைந்து மூட்டைகளாக  வாங்கிக்கிட்டு போறாங்க. இந்த கடையில நிறைய பொருட்கள் தீர்ந்து போச்சுன்னு சொன்னாரு. அப்ப நான் அதை பெருசா எடுத்துக்கலை. அதுக்கு பிறகு வந்த நாட்களில், நம்ம மக்கள் இந்தியக்கடைகளுக்கு படை எடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். இப்படி இவர்கள் படை எடுத்ததுனால கடைகளில் மூன்று மாதத்திற்கு நடக்க வேண்டிய வியாபாரமானது வெறும் ஓரிரண்டு வாரங்களிலேயே நடந்து முடிந்து விட்டது. அதிலும் இட்லி அரிசி, சாப்பாட்டு அரிசி, உளுந்து மற்றும் துவரம் பருப்புகளுக்கு மிகப்பெரிய தட்டுப்பாடு ஏற்பட்டுவிட்டது. இன்னமும் அந்த பொருட்கள் இங்கு கிடைத்தபாடில்லை. 







சரி, நம்மவர்கள் தான் இப்படி என்றால், இந்த ஊர் மக்களும், நம் மக்களுக்கு சளைத்தவர்கள் அல்ல என்பதை நிருபிப்பதைப்போல் அவர்களும் பல்பொருள் அங்காடிகளில் எல்லாம் டாய்லெட் ரோல், tissues, பாஸ்தா, நூடுல்ஸ் என்று சகலத்தையும் காலி செய்து விட்டார்கள். இதில் மிக பெரிய கொடுமை என்னவென்றால், இந்த டாய்லெட் ரோலுக்கு வந்த வாழ்வு தான். டாய்லெட் ரோலுக்கு கடைகளுக்குள்ளேயே அடிதடி எல்லாம் நடந்தது வேற விஷயம். ஒரு சில கடைகளை காவல் துறையினரின் கண்காணிப்பில் நடத்தினார்கள். பல்பொருள் அங்காடிகளில் வேலை பார்க்கும் சில நண்பர்கள் சொன்னது என்னவென்றால்,நான்கைந்து palletகளில் இந்த டாய்லெட் ரோல் வரும், நாங்கள் அதை முழுமையாக எடுத்து வைத்த ஒரு அரை மணி நேரத்திலேயே அவ்வளவும் வித்து போய்விடும், அந்த அளவிற்கு இந்த டாய்லெட் ரோல் மிகப்பெரிய பொக்கிஷமாகிவிட்டது. எந்த ஒரு பல்பொருள் அங்காடிக்கு போனாலும், டாய்லெட் ரோல், tissues இருக்கும் இடம் காலியாகத்தான் இருக்கிறது. இதில் இன்னொரு கொடுமை என்னவென்றால், பெரிய பெரிய மால்களில் இருக்கும் கழிப்பறைகளில் இருந்து இந்த டாய்லெட் ரோல்களை மக்கள் திருடிக்கொண்டு போவது தான். பணம் பொருட்களை கொள்ளையடிக்கும் காலம் போய், டாய்லெட் ரோல்களை திருடும் கட்டத்திற்கு ஆஸ்திரேலியா வந்து விட்டது என்பது தான் மிகப்பெரிய கொடுமையே. இந்த டாய்லெட் ரோல் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக, அதனை தயாரிக்கும் உள்ளூர் நிறுவனம் முழு மூச்சாக 24 மணிநேரமும் அதனை உற்பத்தி செய்ய ஆரம்பித்து விட்டது. ஆனாலும் இன்னும் இந்த டாய்லெட் ரோல் பிரச்சனை தீர்ந்தபாடில்லை. எப்படி நம் இந்திய கடைகளில் தென்னிந்திய அரிசி, பருப்புகள் தட்டுப்பாடாக இருக்கிறதோ, அதே மாதிரி பல்பொருள் அங்காடிகளில் டாய்லெட் ரோல், tissues, பாஸ்தா, நூடுல்ஸ் போன்றவைகள் இன்னும் தட்டுப்பாடுடன் தான் இருக்கின்றன. இன்னும் கொடுமையான விஷயம் என்னவென்றால், காலை 7மணிக்கு திறக்கும் அங்காடிகளில், மக்கள் போய் அத்தியாவச பொருட்கள் எல்லாவற்றையும்  எடுத்து விடுவதால், பின்னால் வரும் முதியவர்களுக்கு ஒன்றும் கிடக்காமல் போய்விடுகிறது. அதனால் அந்த அங்காடிகள் காலை 7மணி முதல் 8மணி வரை முதியவர்களுக்கான நேரம் என்று அறிவித்து விட்டது.



இன்னும் ஒரு ஆச்சிரியமான விஷயம் என்னவென்றால், உறைந்த அசைவ உணவுகளுக்கும் (Frozen Meats) தட்டுப்பாடு ஏற்பட்டுவிட்டது. இந்த பொருட்களை வாங்க வருபவர்கள் எல்லோரும் அளவுக்கு அதிகமாகவே வாங்கிச் செல்கிறார்கள். எனக்கு என்ன புரியலைன்னா, மற்ற பொருட்களை எவ்வளவு வாங்கினாலும் வீட்டில் ஏதாவது ஒரு மூலையில் சேமித்து வைத்துக்கொள்ள முடியும். ஆனால் இந்த உறைந்த உணவுகளை எவ்வாறு சேமிக்க முடியும் என்பது தான். ஆனால் அதற்கும் விடை கிடைத்து விட்டது. அது என்னவென்றால், எப்படி மளிகைச் சாமான்களுக்கு ஒரு தற்காலிக தேவை உருவானதோ, அது போல் இந்த குளிர் சாதன கருவிகளுக்கும் தேவை அதிகரித்து விட்டது. உறைந்த பொருட்களையெல்லாம் சேமித்து வைப்பதற்காகவே இந்த கருவிகளையும் மக்கள் வாங்க ஆரம்பித்து, அந்த கருவிகளுக்கும் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி விட்டார்கள்.


இப்பொழுதும் மாலை நேரத்திற்கு பின் பல்பொருள் அங்காடிகளுக்குச் சென்றால் பிரட் வகையறாக்கள் கிடைப்பதில்லை.





இப்படி மளிகை சாமான்களை போட்டிப்போட்டுக்கொண்டு வாங்குவதைப்போல், சென்ற வாரம் இங்கு புகழ் பெற்ற bondai கடற்கரையில் மக்கள் பெருமளவில் கூடியிருக்கிறார்கள். அந்த செய்தியானது ஒரு மிகப்பெரிய விவாதமாகி, உலகளவில் ஆஸ்திரேலியாவிற்கு இருக்கும் பெயரை களங்கப்படுத்தி விட்டது.  

Friday, April 19, 2019

ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைப்பெற்றதா?


வேண்டுமென்றே(?) பழுதாக்கப்பட்ட ஓட்டுப்பதிவு எந்திரங்கள்....





ஆளே இல்லாத கடையில் டீ ஆத்துபவர்கள்(!) 


மிக சரியாக இயங்கும் ஓட்டுப்பதிவு எந்திரம் 


ஓட்டுப்பதிவு எந்திரங்களை ஏந்திச் செல்லும்  நவீன எந்திரங்கள் 




சொந்த ஊருக்கு வாக்களிக்கச் செல்பவர்களின் அவல நிலை

அதிமுக நிர்வாகி வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக (தயாராக) நின்று கொண்டிருக்கிறார்  


கண்முன்னே இருந்தும் குமரியில் காணாமல் போன 1000 மீனவர்கள் 

குமரியிலும், பட்டுக்கோட்டையிலும் பதிவான கள்ள ஓட்டுக்கள் 

Thursday, April 18, 2019

ஓவியாவின் பள்ளிக்கூட அனுபவங்கள் – 8 (ஊக்கத்தொகை விருது)


(இனியா - புதுமைக்கான விருது (innovation award)
ஓவியா - இணைந்து செயல்பட்டற்கான விருதும்      (collaboration award), ஊக்கத்தொகை விருதும் (Scholarship award)


சென்ற வாரம் ஓவியா,இனியாவின் பள்ளியில் இருந்து, ஓவியாவும் (ஐந்தாம் விகுப்பு), இனியாவும் (இரண்டாம் வகுப்பு) இந்த வாரத்தில் நடக்கவிருக்கும் முதல் பருவ கூட்டத்தில் (first term assembly) விருதுகள் வாங்குகிறார்கள்,வந்து கலந்து கொள்ளுங்கள் என்று கடிதம் வந்திருந்தது. இங்கு பள்ளிகளில் நடக்கும் கூட்டங்களில் (assembly) எல்லாம் பள்ளியின் தலைவர்கள் (மாணவன்,மாணவி தலைவர் மற்றும் மாணவன், மாணவி துணைத்தலைவர்) - குழு தான் முன்னின்று நடத்தும். தொடக்க கல்வி பள்ளிகளில் ஆறாம் வகுப்பில் படிக்கும் மாணவர்கள் தான், தேர்தலில் நின்று வெற்றிப்பெற்று இந்த பதவிக்கு வருவார்கள்.

இம்மாதிரி விருது வழங்கும் கூட்டத்தில், ஆசிரியர்கள் விருது வாங்கும் மாணவர்களின் பெயர்களை படித்து, அந்த விருதை தலைவர்கள் குழுவிடம் கொடுப்பார்கள், தலைவர்கள் தான் அந்த விருதை மாணவர்களிடம் வழங்குவார்கள். இது ஒரு வகையில் விருது வாங்கும் மாணவர்களுக்கு, நாமும் இந்த இடத்தில் நின்று இம்மாதிரி விருதுகளை மற்றவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்ற ஊக்கத்தை அளிக்கும்.

இந்த கூட்டத்திற்கு மாணவிகளுக்கான துணைத்தலைவர் விடுமுறையில் இருந்திருக்கிறார். அதனால் ஓவியாவின் வகுப்பில் ஒரு நாள், எல்லோருக்கும் ஒரு தலைப்பை கொடுத்து எந்த ஒரு முன் தயாரிப்புமின்றி, மூன்று நிமிடம் பேச சொல்லியிருக்கிறார்கள். அதில் ஓவியா தேர்வுப்பெற்று, இந்த கூட்டத்தை நடத்தும் ஒருவராக வாய்ப்பு பெற்றிருக்கிறார். எங்களுக்கு அவர் விருது வாங்குவது மட்டுமல்லாமல், இவ்வாறு ஐந்தாம் வகுப்பிலேயே, விடுமுறையில் இருக்கும் பள்ளியின் துணைத்தலைவருக்கு மாற்றாக அவர் வாய்ப்பு பெற்றது, பெரும் மகிழ்ச்சியை அளித்தது.

மேலும் ஒரு சந்தோஷமான விஷயம் என்னவென்றால், பள்ளியின் பட்டிமன்ற குழுவிழும் (SCHOOL DEBATE TEAM) ஓவியா தேர்வாகி இருப்பது தான். பட்டிமன்ற குழு என்ன செய்யும், எவ்வாறு ஓவியாவை தேர்வு செய்தார்கள் என்பதை பற்றியெல்லாம் வேறொரு பதிவில் சொல்கிறேன்.

இங்கு பள்ளியின் இடைவேளைகளில் எல்லாம் நிறைய விஷயங்கள் செய்கிறார்கள். அதில் ஒன்று தான் UKULELI (கிடாரின் சிறிய வடிவம்) என்கிற ஒரு இசை கருவியை இலவசமாக பயிற்றுவித்தல். இதில் ஆர்வமுள்ளவர்கள் கலந்துகொண்டு பயிற்சி பெறலாம். அதில் ஓவியாவும் கடந்த இரண்டு ஆண்டுகளாக பயிற்சி பெற்றுக்கொண்டிருக்கிறார். இந்த கருவி மற்றும் வேறு சில கருவிகளையும் முழுமையாக கற்றுக்கொள்ள “MUSIC BUS” என்ற ஒரு தனியார் நிறுவனம் வாரம் ஒரு நாள் பள்ளிகளுக்கே சென்று பயிற்றுவிக்கிறார்கள். ஒரு வகுப்புக்கு (30 நிமிடம்) கட்டணமாக $15 பெறுகிறார்கள். இந்த ஆண்டு ஆரம்பத்தில் ஓவியாவும் நானும் அந்த மியூசிக் பஸ்ல சேரட்டுமா என்று கேட்டிருந்தார். நாங்களும் நீ இந்த ஒரு வருடமும் உங்கள் பள்ளியிலேயே கற்றுக்கொள், அடுத்த வருடம், உனக்கு இன்னும் அதே ஆர்வம் இருந்தால் கண்டிப்பாக சேர்த்து விடுகிறோம் என்று சொல்லியிருந்தோம். ஆனால் அவரின் நியாமான ஆசைக்கு கடவுள் அளித்த அங்கீகாரம் தான் ஊக்கத்தொகை விருது.

இந்த விருதானது இந்த ஆண்டு தான் தொடங்கப்பட்டிருக்கிறது. இந்த விருதின் மூலம் ஓவியா ஒரு ஆண்டு முழுவதும் மியூசிக் பஸ்ஸில் பயிற்சி பெறலாம்.








(உட்கார்ந்திருப்பவர்கள் தான் இந்த ஆண்டின் மாணவர்கள் தலைவர் குழ. அதில் ஓவியா துணைத்தலைவருக்கு மாற்றாக இருக்கிறார்)


(மாணவர் தலைவரின் உரை)


(மாணவி தலைவரின் உரை)


(ஓவியாவின் உரை)




(கூட்டத்தின் ஒரு பகுதி)



(விருதை அளிப்பதற்காக நின்றுகொண்டிருக்கிறார்)



இனியா விருதை வாங்குவதற்காக வருகிறார்)




(விருதை வாங்கிக்கொண்டு நிற்கிறார்கள்)




(ஊக்கத்தொகைக்கான விருதை காணொளி)




பின்குறிப்பு - அடுத்த ஆண்டு பள்ளிக்கூட தேர்தலில், ஓவியாவிற்கு தலைவர் பதவிக்கு நிற்க வேண்டும் என்று ஆசை. ஆனால் தனக்கு யார் வோட்டு போடுவார்கள் என்று கவலை. உடனே இனியா, அக்கா, நீங்கள் நில்லுங்கள் நான் என் நண்பர்களிடம் எல்லாம் சொல்லி, உங்களுக்கு வோட்டு போடச்சொல்லுகிறேன் என்று கூறினார். இவர்கள் பேசுவதை எல்லாம் கேட்டபோது எனக்கு நம்மூரில் நடக்கும் அரசியல் கூத்துக்கள் தான் நியாபகத்துக்கு வந்தது. 

Monday, April 8, 2019

ஓட்டு வாங்குவதற்காக அரசியல்வாதிகள் செய்யும் "ஸ்டண்ட்கள்"

ஓட்டு வாங்குவதற்காக நம்மூர் அரசியல்வாதிகள் மக்கள் முன்பு எப்படியெல்லாம் ஸ்டண்ட் அடிக்கிறார்கள் பாருங்கள். இந்த ஸ்டண்ட்கள் எல்லாம் வெற்றி பெற்ற பிறகும் செய்வார்களா??? 
மக்களுக்கு சேவை செய்வதற்கே எங்களுக்கு நேரம் பற்றவில்லை இதில் எங்கேயிருந்து இப்படி எல்லாம் ஸ்டண்ட் அடிக்க முடியும் என்று திருப்பி கேட்பார்கள் . 
 

ஒரு டீக்கடையை கூட விட்டு வைக்கலை. ஒவ்வொரு தேர்தலின் போது தான் இவர்களுக்கு எல்லாம் இந்த டீக்கடைகளே கண்ணில் தெரியும் போல. 


டவுட் கோவாலு - இவர்கள் குடித்த டீக்கு காசு கொடுத்திருப்பார்களா?







டவுட் கோவாலு - இவர் குடிப்பது காப்பியா? டீயா?  இல்ல  இரண்டும்  சேர்த்தா?




டவுட் கோவாலு - நம்மவருக்கு இந்த சின்ன கப் போதுமா?





டவுட் கோவாலு - இந்த கிளாசை என்றைக்காவது கையில் தொட்டிருப்பாரா? 




டவுட் கோவாலு - இது தாமரைப்பூ கலந்த டீயா?




டவுட் கோவாலு - பரிமாறுகிறவர்களுக்கு காவி உடை வாங்கிக்கொடுத்திருப்பாரோ?





டவுட் கோவாலு -  எப்படி இந்த சாப்பாட்டை சாப்பிடுறதுன்னு தெரியலையோ? 



டவுட் கோவாலு - நம்ம வேலைக்கு ஆப்பு வச்சுடுவாங்களோ?
                                                           




டவுட் கோவாலு - காய்கறி வாங்குபவர்களுக்கு தாமரைப்பூவும் இலவசமாக கொடுக்கப்படுமா?




டவுட் கோவாலு - ஓட்டுக் கேட்பதற்காக காலை பிடிக்கிறாரா?




டவுட் கோவாலு - இந்த பாட்டியை கட்டிப்பிடிக்க தோனலையா? 



டவுட் கோவாலு - அரசியலும் சினிமாவும் கை விட்டால்?





டவுட் கோவாலு - எந்த ஊர்ல இந்த ஹோட்டலை நடத்துறீங்க?


டவுட் கோவாலு - இந்த குழந்தையையும் கூட்டிக்கிட்டா பிரச்சாரத்துக்கு போறீங்க?





டவுட் கோவாலு - இந்த குழந்தை பெரியவளாகி தாமரைக்கு ஓட்டு போடுமா?



டவுட் கோவாலு - எம்.ஜி.ஆர் படமா பார்க்குறீங்க?







டவுட் கோவாலு - ஒத்த செருப்புக்கு இவ்வளவு பெரிய செருப்பு ஸ்டாண்ட்டா?



இத்தனை புகைப்படத்தைக் காட்டிலும் எனக்கு மிகவும் பிடித்த புகைப்படம் இந்த புகைப்படம் தான் . 

என்னடா இவன் அரசியல் பதிவெல்லாம் போடுறானேன்னு பார்க்குறீங்களா? தினம் தினம் இவர்கள் அடிக்கின்ற கூத்தை பார்த்து வெறுத்துப்போய் வந்தது தான் இந்த பதிவு. 

டவுட் கோவாலு -  தமிழ் நாட்டில் உள்ள 40 தொகுதிகளிலும்  நோட்டா  வெற்றி பெற்றால்???

கொசுறு - இந்த ஸ்டண்ட் விஷயத்தில் தாமரை தான் முன்னுக்கு இருக்குது போல!!!!

Sunday, April 7, 2019

கல்லூரியின் 25ஆம் ஆண்டு-நினைவுகளின் ஓர் சங்கமம் - 2


                                                            மினி சந்திப்பு                                                                                 (நானும் செல்லப்பாவும் டயட் கண்ட்ரோல்...)

முதல்  பகுதியை படிக்காதவர்கள் - பகுதி-1


அந்த கடினமான வேலை என்னவென்றால், தீர்க்கதரிசி அதிரா அவர்கள் கூறியது போல் எல்லோரையும் எப்படி ஒரே நாளில் ஒன்று சேர்ப்பது என்பது தான். எங்களை ஒன்று சேர்ப்பதற்கு முன்பு, முதலில் கல்லூரியிலிருந்து அனுமதியைப் பெற்று, கல்லூரி தாளாளர் மற்றும் முதல்வர் அவர்களின் தேதியையும் அறிந்து கொண்டு, பின்னர் எல்லோரிடமும் மே,ஜூன் மற்றும் ஜூலை ஆகிய மூன்று மாதங்களில் ஏதாவது ஒரு மாதத்தில் விழா நடத்தலாம் என்று ஒவ்வொரு துறையின் பிரதிநிதிகளிடம் சொல்லி எல்லோரையும் கேட்கச்சொல்லியிருந்தார்கள். ஒரு சிலர் மே மாதம் இறுதி வாரத்திலும், ஒரு சிலர் ஜூன் மாதத்திலும்  வைக்கலாம் என்று கூறி குட்டையை குழப்ப ஆரம்பித்து விட்டார்கள். இறுதியில் வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து, ஜூன் மாதம் 10ஆம் தேதி என்று முடிவானது.

இங்கு எங்கள் துறையில் படித்தவர்களைப் பற்றி கொஞ்சம் சொல்ல வேண்டும். நாங்கள் மொத்தம் 21 மாணவ,மாணவியர்கள் கணிணித்துறையில் பயின்றோம். அதில் இருவர் மாணவிகள். நான் ஆஸ்திரேலியாவிலும், செல்வம், பழனியப்பன் மற்றும் தாமோதரன் மூவரும் சிங்கப்பூரிலும்,வள்ளியப்பன் மற்றும் செல்வதிருப்பதி அமெரிக்காவிலும்,பாண்டி ஐக்கிய அரபு நாடுகளிலும்  வசிக்கிறோம். தேதி முடிவானவுடன், எங்கள் துறையிலிருந்து 13 பேர் நாங்கள் கலந்துக்கொள்கிறோம் என்று சொல்லிவிட்டார்கள். நான் மட்டும் இருதலைக் கொள்ளியாகவே நாட்களைக் கடத்திக்கொண்டிருந்தேன். அதற்கு காரணம் வியாபாரத்தை விட்டுவிட்டு எப்படி வருவது என்பது தான். நண்பர்கள் ஒவ்வொரு முறையும் பேசும்போது கண்டிப்பாக வந்துவிடு என்று தூபம் போட்டுக்கொண்டிருந்தார்கள். அம்மணி தான் கண்டிப்பாக நீங்கள் கலந்துகொள்ளுங்கள், நான் வீட்டையும், வியாபாரத்தையும் பார்த்துக்கொள்கிறேன் என்று எனக்கு தைரியத்தையும், உற்சாகத்தையும் அளித்து என்னை வழியனுப்பினார்கள்.

என்னுடைய பயணத்திட்டமானது, ஜூன் 5ஆம் தேதி சிட்னியிலிருந்து கிளம்பி சென்னை சென்று, 6,7 இரண்டு நாட்கள் சென்னையில் தங்கி, உறவினர்களை சந்தித்துவிட்டு, ஷாப்பிங் செய்துவிட்டு, 8ஆம் தேதி கரூர்க்கு போய் (மாமனார் வீட்டுக்கு போகாமல் போனால் என்னவாவது!!) அங்கேயிருந்து 9ஆம் தேதி மதியம் தேவகோட்டைக்கு சென்று, இரண்டு நாட்கள் அங்கே தங்கிவிட்டு, 11ஆம் தேதி இரவு மீண்டும் சென்னைக்கு திரும்பி 12ஆம் தேதி கடைசி நேர ஷாப்பிங் முடித்துவிட்டு அன்று இரவு சிட்னிக்கு விமானம் ஏறுவது தான் பயணத்திட்டம். நான் இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக மொத்தமாக 9 நாட்கள் அம்மணியிடம் வியாபாரத்தையும், வீட்டையும் ஒரு விதமான தைரியத்தில் ஒப்படைத்தேன்.

5ஆம் தேதி இரவு சென்னை வந்தவுடன் மறு நாள் நண்பர் செல்லப்பவை மட்டும் சந்தித்துவிட்டு (20 ஆண்டுகள் கழித்து இவரை சந்தித்தேன்), பர்சேஸ் எல்லாம் செய்து கொண்டு, நடுநடுவில் உறவினர்களையும் சந்தித்து முடித்தேன். 7ஆம் தேதி இரவு நண்பர் சிதம்பரம் வீட்டிற்கு சென்று அவரின் குடும்பத்தாரை சந்தித்தேன். சிதம்பரத்துக்கும் எனக்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது. இருவரின் மாமனார் ஊரும் கரூர் தான். (செல்லப்பா,சிதம்பரம், மற்றும் முத்துகுமார் சென்னையில் வசிக்கிறார்கள்.) செல்லப்பாவும், முத்துக்குமாரும் அசோக் நகரிலிருக்கும் சரவண பவனுக்கு வந்துவிடுகிறோம் என்று கூறியிருந்தார்கள். அதனால் சிதம்பரம் வீட்டில் மாலை பலகாரத்தை(?) மட்டும் முடித்துக்கொண்டு நேராக சரவண பவனுக்கு சென்றோம். அங்கு நால்வரும் இரவு உணவை முடித்துக்கொண்டு சிறிது நேரம் மலரும் நினைவுகளை எல்லாம் அசைபோட்டுவிட்டு மற்ற மூவரும் என்னை கரூர் செல்லும் பேருந்தில் ஏற்றி விட்டு வீடு திரும்பினார்கள்.

 8ஆம் தேதி காலை கரூர் சென்றடைந்தேன். அங்கு அடுத்த நாள் மதியம் வரை இருந்துவிட்டு, தேவகோட்டைக்கு கிளம்பினேன். கரூரிலிருந்து காரைக்குடி,தேவகோட்டைக்கு செல்வதற்கு பொதுவாக எல்லோரும் திருச்சி வழியாகத்தான் செல்வார்கள். ஆனால் நான் அவ்வாறு செல்லாமல் வேறு மார்க்கமாக சென்றேன். நண்பர்கள் சிலர், கல்லூரி நாட்களில் என்னையும் இன்னொருவரையும் இணைத்து காதல் பறவைகள் வந்து விட்டார்கள் என்று கூறுவார்கள். அந்த காதலியை பார்பதற்காகத்தான் நான் வேறு மார்க்கமாக  சென்றேன். அந்த காதலி யார் என்று அடுத்த பதிவில் சொல்கிறேன். 

பி.கு: இந்த பதிவை சென்ற வாரத்தில் இருந்து எழுத வேண்டும் என்று நினைத்து எழுத முடியாமல் போய் விட்டது . கண்டிப்பாக இன்றைக்கு எவ்வளவு நேரமானாலும் எழுதிட  வேண்டும் என்று நினைத்தேன், காரணம் நாளைக்கு ஒரு மணி நேரம் கூட தூங்கலாம் (நாளைக்கு டே லைட் சேவிங்க் முடிவடைகிறது, அதனால் கூடுதலாக ஒரு மணி நேரம் கிடைக்கும்). கடந்த இரண்டு நாட்களாக நண்பர்களின் தளத்திற்கு செல்ல இயலவில்லை. நாளை முதல் எல்லோரின் தளத்திற்கு வந்து பின்னூட்டம் இடுகிறேன்.   

                           ---தொடரும்


Saturday, March 30, 2019

கல்லூரியின் 25ஆம் ஆண்டு-நினைவுகளின் ஓர் சங்கமம் - 1

தேவகோட்டை ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரி, கணினித்துறை  - 1993ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், நான் மற்றும் நண்பர்கள் அனைவரும் வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு செல்லத் தயாரானோம்.  சிலர் முதுநிலை படிப்பு படிப்பதற்கும், சிலர் வேலை தேடுவதற்கும் பிரிந்து சென்றார்கள். நானும் வேலை தேடுவதற்காக அவர்களை விட்டு பிரிந்து  சென்றேன். அப்படி இப்படி என்று இப்போது 25 ஆண்டுகள் முடிந்து விட்டது. 25ஆண்டுகள்  முடிந்ததையொட்டி,  எங்களுடன்  படித்த அனைத்துத் துறை நண்பர்களும் இதனை ஒரு விழாவாக கொண்டாட வேண்டும் என்று முடிவெடுத்து சென்ற ஆண்டு ஜூன் மாதம் 10ஆம் தேதி கொண்டாடினார்கள். அதில் நானும் கலந்து கொண்டேன்.  அந்த விழாவைத்தான் ஒரு குறுந்தொடராக பதிவிடுகிறேன்.




இந்த இடைப்பட்ட 25 ஆண்டுகளில் ஏறக்குறைய முதல் 15 ஆண்டுகள் வரை ஒரு சில நண்பர்களுடன் தொடர்பில் இருந்தேன். அதுவும் மின்னஞ்சல் மூலமாகவும், தொலைபேசி மூலமாவாகவும் தான். நேரில் சந்திக்கவில்லை.  கடைசி 10 ஆண்டுகள் , வெறுமையின் காரணமாக (அப்பொழுது தான் என்னுடைய தாயார் என்னை விட்டு பிரிந்த காலம்) அந்த ஒரு சில நண்பர்களோடும் நான் தொடர்பை துண்டித்துக்கொண்டேன். மனது வேறு எதிலும் ஈடுபாடு இல்லமல் இருந்த காலகட்டம் அது. அந்த துக்கத்திலிருந்து வெளியே வருவதற்காக, தமிழை மட்டும் நண்பனாக ஆக்கிக்கொண்டேன். அதாவது தமிழ் பள்ளியில் குழந்தைகளுக்கு தமிழ் சொல்லிக் கொடுத்துக்கொண்டும், குறுநாடகங்களை எழுதி மேடைகளில் நெறியாள்கை செய்து கொண்டும், வலைப்பூவில் எழுதிக்கொண்டும் இருந்தேன். 

சென்ற வருடம் ஆரம்பத்தில் எங்கள் கல்லூரியின் இயற்பியல் துறை, கணிதத்துறை, கணிணித்துறை நண்பர்கள் எல்லாம் சேர்ந்து 25ஆம் ஆண்டு விழாவை நடத்த வேண்டும் என்று முடிவெடுத்து ஒரு whatsup குழுவை ஆரம்பித்து, தங்களுடன் பயின்ற மாணவர்களை எல்லாம் அதில் சேர்க்க ஆரம்பித்தார்கள். 

இந்த சமயத்தில் தான் இங்கு இருக்கும் நண்பரின் முலமாக  சிங்கப்பூரில் இருக்கும் நண்பர்  பழனியப்பனோடு மீண்டும் தொடர்பில் இருக்க ஆரம்பித்தேன். பழனியப்பன் என்னையும் அந்த குழுவில் இணைத்து விட்டார்.  ஒவ்வொரு துறையில் இருந்து குறைந்தது இரண்டு பேரை விழா ஏற்பாட்டாளர்களாகவும், அந்த துறையின்  பிரதிநிதிகளாகவும் நியமித்து விழாவிற்கான ஏற்பாடுகளை செய்ய ஆரம்பித்தார்கள். விழா நாளன்று ஆண்கள் எல்லோரும் ஒரே மாதிரியான டிஷர்ட்டும், பெண்கள் எல்லோரும் ஒரே மாதிரியான புடவையையும் அணிய வேண்டும் அன்று முடிவெடுத்து அதற்கான ஏற்பாடுகளையும், மறுபுறம் அன்றைக்கு காலை,மதியம்,மாலை நேரங்களில் என்ன மாதிரியான உணவு வகைகள்  இருக்க வேண்டும் என்றும் அதற்கான ஏற்பாடுகளையும், அடுத்து ஆசிரியர்களுக்கு  என்ன மாதிரியான நினைவுப்பரிசை வழங்க வேண்டும் என்று வேலைகள் அனைத்தையும் ஏற்பாட்டாளர்கள் மும்முரமாக பார்க்கத் தொடங்கினார்கள். இந்த  வேலைகள் எல்லாம் கூட அவர்களுக்கு கடினமாக இருந்திருக்காது, ஒரே ஒரு வேலையைத் தவிர, அது என்னவென்றால்....
---தொடரும்